பினாங்கின் தாமான் மங்கிஸ் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த விக்டோரியா சிறப்பு மருத்துவமனை மற்றும் ஹோட்டல் கட்டுமானத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டு, வரும் 2029-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நிர்வாகத்தின் கீழ் புத்துயிர் பெற்றுள்ள இத்திட்டம், 21 மாடிகளைக் கொண்ட ஒரே கட்டடமாக அமையவுள்ளது. இதில் 13 மாடிகள் மருத்துவமனைக்காகவும், மேல் உள்ள 8 மாடிகள் ஹோட்டலுக்காகவும் ஒதுக்கப்பட்டு, 151 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையும், 264 அறைகளைக் கொண்ட ஹோட்டலும் அமைக்கப்படவுள்ளன.
சுமார் 800 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவுள்ள இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் தொடங்குகின்றன. இந்தத் திட்டம் பினாங்கின் தனியார் மருத்துவச் சேவை மற்றும் மருத்துவ சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிக்கும் என இத்திட்டத்தின் ஆலோசகரான 'அர்கிடெக்னியா' நிறுவனம் தெரிவித்துள்ளது.








