ஈரான் போர்ச் சூழலால் எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகமாக மாற்றியமைக்கப்படுவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் இன்று மாலையில் சிறப்பு செய்தியில் அறிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், மாதத்திற்கு 300 லிட்டர் என்றிருந்த BUDI95 பெட்ரோல் வாங்கும் வரம்பு, 200 லிட்டராகக் குறைக்கப்படவிருக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு குறைக்கப்பட்டாலும், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை எவ்வித மாற்றமின்றி ஒரு ரிங்கிட் 99 சென் என்றே தொடரும்.
உலகளாவிய போர்ச் சூழலிலும் எரிபொருள் விநியோகத்தின் தொடர்ச்சியை உறுதி செய்ய இந்தத் தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
மலேசியர்களில் 90 விழுக்காட்டினர் மாதத்திற்கு 200 லிட்டருக்கும் குறைவாகவே பயன்படுத்துவதால், இந்த முடிவு சாதாரண மக்களைப் பாதிக்காது என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கவும், விநியோகத்தை நிலையாக வைத்திருக்கவும் அரசாங்கம் இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளதாக பிரதமர் விளக்கினார்.








