கிள்ளான் துறைமுகத்தைத் தென்கிழக்கு ஆசிய வட்டார அளவில் ஒரு மாபெரும் துறைமுகமாக மாற்றுவதே கேரி தீவு துறைமுகத் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் பல்வேறு கட்டங்களாக உருவாக்கப்பட உள்ளதால், இது முழுமையடைய 20 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் துவாஸ் மாபெரும் துறைமுகப் போட்டி நிலவும் சூழலில், மலேசியாவைத் தென்கிழக்கு ஆசிய வட்டாரத்தின் கடல்சார் மையமாக நிலைநிறுத்த இந்த உள்கட்டமைப்பு விரிவாக்கம் மிகவும் அவசியமானது என்று அவர் வலியுறுத்தினார்.
தற்போது சிலாங்கூர் மாநில அரசுடன் நில விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், அவை தீர்க்கப்பட்டவுடன் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
கேரி தீவு முனையம் 3 என்று அழைக்கப்படும் இத்திட்டத்திற்காகச் சிலாங்கூர் அரசு 1,699.68 ஹெக்டேர் நிலத்தை அடையாளம் கண்டுள்ளதுடன், உள்ளூர் பழங்குடியின மக்கள் மற்றும் மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நிபந்தனையுடன் இத்திட்டத்தை முன்னெடுக்கப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் அந்தோனி லோக் குறிப்பிட்டுள்ளார்.








