கோலாலம்பூர், ஏப்ரல்.05-
நாட்டின் சிறிய அளவிலான வணிகங்களை மிகப் பெரிய நிலைக்கு வளர்த்தெடுப்பதே தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் முதன்மை நோக்கம் என்று அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார். 15 ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரத்தில் சிறிய குடையின் கீழ் தொடங்கப்பட்ட நாசி லெமாக் சலேஹா உணவகத்தின் அபார வளர்ச்சியை முன்மாதிரியாகக் கொண்டு அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

"வெறும் மூவாயிரம் ரிங்கிட் கடனுதவியுடன் பயணத்தைத் தொடங்கிய காக் சலேஹா, இன்று நாளொன்றுக்கு 15 ஆயிரம் பொட்டலங்களை விற்பனை செய்யும் அளவிற்குத் தனது வணிகத்தைப் பிரம்மாண்டமாக உயர்த்தியுள்ளார். ஒரு சிறிய சமையலறையில் தொடங்கி இன்று சொந்தமாக உணவகம், நவீன சமையலறை, நூற்றுக்கணக்கான பணியாளர்களுடன் அவர் அடைந்துள்ள இந்த வெற்றி, மலேசியத் தொழில்முனைவோரின் கடின உழைப்பிற்குச் சான்றாகும்," என்று அமைச்சர் புகழாரம் சூட்டினார்.

தற்போது இந்த வணிகத்தின் செயல்பாட்டு அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள அவரது மகன் Dr Rizal, உற்பத்தியை மேலும் இருமடங்காக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காகத் தேவையான எளிதான நிதியுதவியையும் வசதிகளையும் வழங்குவது குறித்து ஆலோசிக்குமாறு அமைச்சின் கீழ் உள்ள ஏஜென்சிகளுக்குத் தான் ஆணையிட்டுள்ளதாக ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார். "சிறிய வணிகங்களைப் பெரிய அளவிலும், பெரிய வணிகங்களை இன்னும் பிரம்மாண்டமாகவும் மாற்றுவதே தனது அமைச்சின் பணி எனவும், காக் சலேஹா போன்ற பல திறமையான தொழில்முனைவோரை உருவாக்கி, மலேசியாவின் வணிகத் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்துவோம் எனவும் குறிப்பிட்டார். தமது இலக்கு தெளிவானது: தொடர்ந்து முன்னேறுவோம்" என்று அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.








