செகாமட், ஏப்ரல்.05-
கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி ஜோகூர் பாரு - சிரம்பான் சாலையில் மூன்று உயிர்களைப் பலி வாங்கிய கோர விபத்தில் சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனத்தின் மீது, சாலைப் போக்குவரத்துத் துறை, JISA எனப்படும் 'பாதுகாப்பு தணிக்கை' நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கின் ஆணைப்படி, அந்த நிறுவனத்தின் பாதுகாப்பு விதிமுறைப் பின்பற்றுதல்களை ஆய்வு செய்து வருவதாக ஜேபிஜே தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி தெரிவித்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய டிரெய்லர் ஓட்டுநர் போதைப்பொருள் சோதனையில் Methamphetamine உட்கொண்டிருந்தது உறுதிச் செய்யப்பட்ட நிலையில், அவரது வணிக வாகன ஓட்டுநர் உரிமம் – GDL தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
தரைவழிப் பொதுப் போக்குவரத்து முகமையுடன் இணைந்து நடத்தப்படும் இந்தத் தணிக்கை அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும், ஓட்டுநரின் ஒழுக்கத்தைக் கண்காணிக்கத் தவறிய அந்த நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.








