பெரா, ஏப்ரல்.05-
பகாங், பெரா மாவட்டம் திரியாங் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த மார்ச் 29-ஆம் தேதி நிகழ்ந்த வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரைக் காவற்படையினர் கோலாலம்பூர் மருத்துவமனையில் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் இதயச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது பிடிபட்ட நிலையில், இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நோயாளி ஒருவர் தெமர்லோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
முதற்கட்ட விசாரணையில் இந்த வன்முறையில் நான்கு பேர் ஈடுபட்டதாகத் தெரிந்த போதிலும், தற்போது மொத்தம் ஏழு பேர் இதில் சம்பந்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பெரா மாவட்டக் காவற்படைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஸுல்கிஃப்லி நஸீர் தெரிவித்தார். தலைமறைவாக உள்ள மீதமுள்ள 6 பேரையும் காவற்படையினர் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், பிடிபட்ட நபரை வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.








