ரந்தாவ் பாஞ்சாங், ஏப்ரல் 29-
தாய்லாந்தின் நாராதிவாட் மாநிலத்திலுள்ள குவாலோசிரா என்ற பகுதியில், நிகழ்ந்த வெடிகுண்டு வெடிப்பினால், கொலொக் ஆற்றோர பகுதியிலுள்ள ரந்தாவ் பாஞ்சாங்கில் அதிர்வுகள் உணரப்பட்டன.
இன்று நள்ளிரவு மணி 1.30 அளவில் திடிரென ஏற்பட்ட வெடிகுண்டு சத்தத்தையும் அதிர்வையும் கண்டு அங்குள்ள குடியிருப்பாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். வெடிகுண்டு வெடிப்பு சத்தத்துடன் துப்பாக்கிச் சூட்டு சத்தத்தையும் தாங்கள் கேட்டதாக பொதுமக்கள் சிலர் கூறியுள்ளனர்.
ரந்தாவ் பாஞ்சாங் நகரிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவு வரையில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டது. அந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, ரந்தாவ் பாஞ்சாங், கொலொக் ஆற்று பகுதியிலுள்ள பல சட்டவிரோத தளங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
முன்னதாக, கொலொக் ஆற்றோரத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பான காணொளிகளை, மலேசியர்கள் தங்களது முகநூலில் பகிர்ந்திருந்தது பரவலானது.








