அலோர் காஜா, லெபோ ஏஎம்ஜே வழித்தடத்தில் ஜெலாடாங் போக்குவரத்துச் சந்திப்பில் இன்று அதிகாலை நிகழ்ந்த கார் விபத்தில், ஜாசின் நாடாளுமன்ற உறுப்பினரும் பாஸ் கட்சியின் மலாக்கா மாநில ஆணையருமான சுல்கிஃப்லி இஸ்மாயில் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பினார்.
இன்று அதிகாலை 5:20 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் சுல்கிஃப்லி ஓட்டி வந்த காரும், மற்றொரு காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அகமட் அபு பக்கர் கூறுகையில், "இந்த விபத்தில் 60 வயதான சுல்கிஃப்லியின் இரு கைகளிலும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன; அவரது மனைவிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
அவர்களின் வாகனத்தை மோதிய மற்றொரு காரின் ஓட்டுநரான 30 வயது தொழிற்சாலை பெண் ஊழியருக்கு விலா எலும்பு, இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டு மலாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரில் இருந்த மற்ற மூவரும் சொற்ப காயங்களுடன் அலோர் காஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அகமட் அபு தெரிவித்தார்.








