கோலாலம்பூர், நவம்பர்.11-
சபா மாநிலத்திலிருந்து மத்திய அரசாங்கம், வசூலிக்கின்ற மொத்த வருமானத்தில் 40 விழுக்காட்டுத் தொகையை அந்த மாநிலத்திற்கே திருப்பித் தரப்பட வேண்டும் என்று அண்மையில் கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசாங்கம் அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாது என்று சட்டத்துறை அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக இன்று மாலையில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அலுவலகம் தெரிவித்தது.
எனினும் இவ்விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப சபா மாநில அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி, மத்திய அரசாங்கம் தீர்வு காணும் என்று அது குறிபிட்டுள்ளது.
சபாவுடன் செய்து கொள்ளப்பட்ட மலேசிய ஒப்பந்தம் 1963 இன் கீழ் கடந்த 50 ஆண்டு காலமாக சபா மாநிலத்திற்குத் தர வேண்டிய 40 விழுக்காட்டுத் தொகையை மத்திய அரசாங்கம் வழங்காமல் இருப்பது, சட்டவிரோதச் செயல் என்றும், இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும் கோத்தா கினபாலு நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு அளித்தது.
இந்தத் தீர்ப்பை எதித்து மேல்முறையீடு செய்யப்படும் என்று இதற்கு முன்பு சட்டத்துறை அலுவலகம் அறிவித்ததைத் தொடர்ந்து அதனை ஆட்சேபிக்கும் வகையில் சபா மாநில தன்னாட்சி மற்றும் சிறுபான்மையினரின் உரிமைக்காக போராடி வரும் UPKO எனப்படும் The United Progressive Kinabalu Organisation கட்சியின் தலைவர் டத்தோ எவோன் பெனெடிக், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.








