Mar 3, 2026
Thisaigal NewsYouTube
அண்ணனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்பிக்கு 20,000 ரிங்கிட் ஜாமீன் அனுமதி
தற்போதைய செய்திகள்

அண்ணனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்பிக்கு 20,000 ரிங்கிட் ஜாமீன் அனுமதி

Share:

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது சொந்த அண்ணனின் மரணத்திற்கு காரணமானதாகக் குற்றம் சாட்டப்பட்ட 31 வயதுடைய எம். குபேந்திரன் என்பவர் செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ் சாட்டப்பட்டார்.

நீதிபதி நோர் அஸ்லின் ஒஸ்மான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட குபேந்திரன், தனக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். கடந்த ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி அதிகாலை 3.40 மணியளவில் பத்து கேவ்ஸ், செலாயாங் பாருவில் உள்ள ஒரு வீட்டில் 36 வயதான தனது அண்ணன் எம். கஜேந்திரனுக்கு மரணத்தை விளைவிக்கக்கூடிய காயத்தை ஏற்படுத்தியதாக குபேந்திரனுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 304 பிரிவின் கீழ் குபேந்திரன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவி, மூன்று குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோரைப் பராமரிக்க வேண்டிய குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரமாக இருப்பதால் அவருக்குப் பிணை வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் கிஷோ குமார் வாதிட்டார். இதற்கு பிராசிகிஷயன் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

எனினும் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குபேந்திரனுக்கு இரண்டு ஜாமீன்தாரர்களுடன் 20,000 ரிங்கிட் பிணை அனுமதித்தார். அத்துடன், அவர் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் மாதந்தோறும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், வழக்கின் சாட்சிகளைத் தொடர்பு கொள்ளவோ அல்லது இடையூறு செய்யவோ கூடாது என்றும் கூடுதல் நிபந்தனைகளை விதித்தார்.

Related News