ஃபெடரல் நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய பின், சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய பெரோடுவா கெம்பாரா காரின் ஓட்டுநரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஷா ஆலாமிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்ற, 59 வயதுடைய உள்ளூர் நபர் ஒருவரால் இந்த வாகனம் ஓட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த வாகனம் அஜாக்கிரதையாகவும் ஆபத்தான முறையிலும் ஓட்டப்பட்டு, அங்கு சென்றுகொண்டிருந்த ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டு அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணைக்கு உதவும் வகையில் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.








