மாநிலத் தேர்தலை முன்னிட்டு, குறிப்பாக ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலானில் அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்காக அம்னோ கட்சியின் சில தலைவர்கள் பாஸ் கட்சியுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாக அக்கட்சியின் முன்னாள் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் முகமது புவாட் ஜர்காஷி தெரிவித்துள்ளார்.
இந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையின் உடன்பாட்டின்படி, ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தாது என்றும், இதன் மூலம் பாரிசான் நேஷனல் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட வழிவகை செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்த ரகசிய உடன்பாட்டினால் அம்னோ ஜோகூரில் பெரும் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தலைவர்கள் சிலர் நம்பியதாகவும், இதன் காரணமாகவே அவர்கள் மத்தியில் அதிகப்படியான தன்னம்பிக்கையும் அகந்தையும் உருவானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இறுதியில் இந்த பாஸ்-அம்னோ கூட்டணி முயற்சி தோல்வியில் முடிந்ததால் பாரிசான் நேஷனல்லின் அரசியல் நிலைப்பாடு குழப்பமடைந்ததுடன், இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறான மற்றும் தகுதியற்ற வேட்பாளர்களை நிறுத்தியதால் சூழல் மேலும் மோசமடைந்ததாக முகமது புவாட் விமர்சித்துள்ளார்.








