புடி மடானி டீசல் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியத் திட்டத்தின் ஆரம்பகட்ட அணுகல் தொடங்குவதை முன்னிட்டு, இத்திட்டத்தில் மூன்று புதிய மேம்பாடுகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகு கொண்டுவரப்பட்டுள்ள இம்மாற்றங்களின்படி, ஜூலை 1 முதல் மூன்று மாதங்களுக்கு டீசல் வாகனங்களுக்கான 'உரிமையாளர் மாற்று கட்டணம்' தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
வாகனத்தின் மானியத் தகுதியை அதன் உண்மையான பயனர் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றிக்கொள்ளவும், சிறு வணிகர்கள் பயன்படுத்தும் நிறுவனங்களுக்குச் சொந்தமான பிக்கப் மற்றும் ஜிப் ரக வாகனங்களுக்கும் இந்த மானியத்தை நீட்டிக்கவும் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் தகுதியான மலேசியர்களுக்கு டீசல் மானியம் நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்ய முடியும் என்று இரண்டாம் நிலை நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்துள்ளார். டீசல் மானியத்திற்கு விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு உதவும் வகையில், ஜூலை மாதத்தில் வரும் அனைத்துச் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜேபிஜே மற்றும் யுடிசி அலுவலகங்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். மேலும், பொதுமக்கள் தங்களுக்கு இந்த மானியம் கிடைக்கத் தகுதி உள்ளதா என்பதை www.budimadani.gov.my என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம்.








