ஜோகூர் மாநிலத்தின் 16-வது சட்டமன்றத் தேர்தலில் இளம் மற்றும் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள், கடுமையான போட்டி நிலவும் தொகுதிகளில் முடிவை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக உருவெடுப்பார்கள் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உண்டி18 திட்டம் மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவு நடைமுறை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தகுதியான புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக கடும் போட்டி நிலவும் தொகுதிகளில், இந்த இளம் வாக்காளர்கள் “கிங்மேக்கர்” ஆக மாறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
காரணம், இவர்களில் பலர் எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது கொள்கையுடனும் வலுவான பற்றுறவை கொண்டிருக்கவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இது குறித்து இல்காம் மைய ஆய்வு பிரிவு தலைவர் இணைப் பேராசிரியர் டாக்டர் முகமது யுஸ்ரி இப்ராகிம் கூறுகையில், மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது முக்கியமான அளவில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
உண்டி18 மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவானது நடைமுறைக்கு வந்ததையடுத்து, ஒவ்வொரு தொகுதியிலும் முதல் முறையாக வாக்களிப்போரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
குறிப்பாக, குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தீர்மானிக்கப்படும் தொகுதிகளில் இவர்களின் வாக்கு விருப்பமே இறுதி வெற்றியாளரை தீர்மானிக்கக்கூடும் என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்களின் படி, ஜோகூர் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 40 வயதுக்குட்பட்டோர் 12.9 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளனர்.
அவர்களில் 30 முதல் 39 வயதுக்குட்பட்டோர் 5 லட்சத்து 87 ஆயிரத்து 888 பேரும், 21 முதல் 29 வயதுக்குட்பட்டோர் 5 லட்சத்து 44 ஆயிரத்து 657 பேரும், 18 முதல் 20 வயதுக்குட்பட்டோர் 1 லட்சத்து 65 ஆயிரத்து 386 பேரும் உள்ளனர்.
இந்நிலையில், 16-வது ஜோகூர் மாநிலத் தேர்தலானது வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான முன்கூட்டியே வாக்குப்பதிவு வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.








