சரவாக் மாநில சட்டமன்றத்தில் புதிதாக 17 தொகுதிகளை சேர்க்கும் முன்மொழிவுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து அம்மாநில ஜிபிஎஸ் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவரான அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்ஸா விமர்சித்துள்ளார்.
பெசாகா பூமிபுத்ரா பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவு தலைவரான அவர், இந்த முன்மொழிவு மாநில சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே உள்ளடக்கியது என்பதால், நாடாளுமன்றத் தொகுதிகளில் எந்த மாற்றமும் தேவையில்லை என்றும், அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் மட்டுமே போதுமானது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சரவாக் மாநில சட்டமன்றத்தில் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதன் பின்னர், நாடாளுமன்றம் மூன்று முறை கூட்டப்பட்ட போதிலும், இதுவரை அந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் பெறப்படாதது ஏமாற்றமளிப்பதாக விமர்சித்துள்ளார்.
அதேவேளையில், இவ்வாண்டு இறுதிக்குள் சரவாக் மாநிலத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த முன்மொழிவுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறுவதற்கான கால அவகாசம் தற்போது மிகவும் குறுகியதாக இருப்பதாக அப்துல் கரீம் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, புதிய 17 மாநில சட்டமன்றத் தொகுதிகளை உருவாக்கும் திட்டத்திற்கு விரைவில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








