ஜோகூர் மாநிலத் தேர்தல் தொடர்பாக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து நேற்று இரவு 11.59 மணி வரை மொத்தம் ஏழு புகார்கள் பெறப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து அம்மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப் ரஹ்மான் அர்சாத் கூறுகையில், பெறப்பட்ட ஏழு புகார்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக மூன்று விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தல் காலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கை உறுதிப்படுத்த போலீஸ் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றவியல் சட்டம் பிரிவு 435-ன் கீழ், நெருப்பு அல்லது வெடிபொருட்களைப் பயன்படுத்தி சேதம் விளைவித்த குற்றத்திற்காக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மற்றொரு வழக்கானது, குற்றவியல் சட்டம், பிரிவு 427-ன் கீழ் சொத்து சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், மேலும் ஒரு வழக்கானது, 1948-ஆம் ஆண்டின் தேச நிந்தனைச் சட்டம் பிரிவு 4(1) மற்றும் 1998-ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








