Mar 3, 2026
Thisaigal NewsYouTube
ஆன்லைன் மோசடி: இழந்த பணத்தை 100 சதவீதம் மீட்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை - சைஃபுடீன் நசுத்தியோன் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

ஆன்லைன் மோசடி: இழந்த பணத்தை 100 சதவீதம் மீட்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை - சைஃபுடீன் நசுத்தியோன் எச்சரிக்கை

Share:

ஆன்லைன் மோசடிகளால் இழந்த பணத்தை தேசிய மோசடி தடுப்பு மையத்திடம் தாமதமாகப் புகாரளித்தால், அந்தப் பணத்தை 100 சதவீதம் மீட்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

ஒரு நபர் ஏமாற்றப்பட்ட பிறகு, அந்தப் பணத்தை 80 முதல் 90 சதவீதம் வரை வேறு கணக்குகளுக்கு மாற்றி மறைப்பதற்கு மோசடி கும்பலுக்கு வெறும் 3 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே போதுமானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

உதாரணமாக, மதியம் 2 மணிக்கு ஏமாற்றப்பட்ட ஒரு நபர், இரவு 10 அல்லது 12 மணிக்கு புகாரளிக்கும்போது, அந்த இடைப்பட்ட 10 மணி நேர அவகாசம் பணத்தை முழுமையாகக் காணாமல் ஆக்க போதுமானதாக உள்ளது என அவர் விளக்கினார்.

இன்று சைபர் ஜெயாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தேசிய மோசடி தடுப்பு மையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்த நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சைபுடின் , பொதுமக்கள் ஆன்லைன் மோசடிக்கு ஆளாக நேரிட்டால், முதல் ஒரு மணி நேரத்திற்குள்ளேயே 997 என்ற எண்ணிற்கு அழைத்து புகாரளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இவ்வாறு விரைவாகப் புகாரளிக்கும்போது மட்டுமே, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கி பணத்தை மீட்டெடுக்க வாய்ப்பு உள்ளது. இழந்த பணத்தை மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் புகாரளிக்கப்படும் வேகத்தைப் பொறுத்தே அமையும் என்று அமைச்சர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார்.

மேலும், ஆன்லைன் பணப்பரிமாற்றங்களில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் அல்லது அழைப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Related News