சிரம்பானில் உள்ள தாமான் மலேசியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களில் 11 நாய்கள் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவை அனைத்தும் திட்டமிட்டு விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என விலங்குகள் நல அமைப்பான 'Furrykids Safehaven' சந்தேகம் வெளியிட்டுள்ளது.
உயிரிழந்த நாய்களில் சில ஏற்கனவே கருத்தடை செய்யப்பட்டு, அப்பகுதி மக்களால் பராமரிக்கப்பட்டு வந்தவை எனக் கூறப்படுகிறது. உயிரிழப்பதற்கு முன்னதாக சில நாய்கள் வாயில் நுரை தள்ளுதல் மற்றும் உடல் துடித்தல் போன்ற அறிகுறிகளைக் கொண்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாய்கள் மட்டுமின்றி, அதே பகுதியில் சில பறவைகளும் இறந்து கிடந்தன. இது தொடர்பாக கால்நடை பராமரிப்புத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன், இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.








