பெரும் வர்த்தகர்களான துன் மகாதீர் முகமட்டின் இரண்டு மகன்களும் தங்கள் சொத்து விவரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மில் அறிவிக்கத் தவறுவார்களேயால் அவ்விருவரும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்கள் என்று அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் தான் ஶ்ரீ அசாம் பாக்கி இன்று எச்சரித்துள்ளார்.
துன் மகாதீரின் இரு புதல்வர்களான 63 வயது தான் ஶ்ரீ மொக்சானி மஹாதிர்,65 வயது Mirzan Mahathir ஆகிய இருவரும், தங்கள் சொத்து விவரங்களை அறிவிக்க, தொடர்ந்து தவறுவார்களேயானால், அவர்களுக்கு எதிரான பூர்வாக வழக்கு விசாரணைக்கு முன்னதாக சொத்து விவரங்களை அறிவிக்கத் தவறியதற்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, குற்றஞ்சாட்டப்படுவர் என்று அசாம் பாக்கி குறிப்பிட்டார்.
இவ்விருவரும் தங்கள் சொத்து விவரங்களை 30 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி 26 ஆம் தேதி எஸ்பிஆர்எம் காலக்கெடு நிர்ணயித்து இருந்ததாக அசாம் பாக்கி சுட்டிக்காட்டினார்.
துன் மகாதீரின் இரண்டு மகன்களும் மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் சட்டவிரோத பண மாற்றம் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
தங்கள் தந்தை துன் மகாதீர் நாட்டின் பிரதமராக பொறுப்பில் இருந்த போது அரசாங்க குத்தகைத் திட்டங்களை பெறுவதற்காக அரசாங்க சார்பு நிறுவனமான GLC- யில் தங்கள் நலன் சார்ந்த பங்குகளை வைத்திருந்தது மற்றும் நாட்டின் பெட்ரோலிய நிறுவனம் ஒன்றில் எண்ணெய் தோண்டும் கட்டமைக்கான லைசென்ஸை பெற்று இருந்தது தொடர்பில் Mohkzani Mahathir - ரும் Mirzan Mahathir – ரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.








