கோலாலம்பூர், மே 28-
அண்மையில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலிவுட் நட்சத்திரமும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த ஆடையை, பத்துமலை தைப்பூச விழாவில் எடுக்கப்படும் காவடியுடன் ஒப்பிட்டு, சமூக ஊடகத்தில் கருத்து பதிவேற்றம் செய்த நாட்டின் பிரபல சமையல் கலை நிபுணரான செஃப் வான், தமது செயலுக்காக இந்து பெருமக்களிடம் இன்று பகிரங்க மன்னிப்புக் கோரினார்.
தற்போது புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள 66 வயதுடைய செஃப் வான், இனவெறி கருத்துகளை தெரிவிக்கவோ அல்லது பிற மதத்தை அவமதிக்கவோ தாம், கிஞ்சிற்றும் நோக்கம் கொண்டிருந்ததில்லை என்றார்.
மாறாக, ஐஸ்வர்யா ராயின் அந்த ஆடை பாவனையைப் பார்த்ததும் மனதில் தோன்றிய முதல் கருத்தை நகைச்சுவைக்காக சமூக வளைத்தளத்தில் பதிவிட்டதாகவும், தாம் இனவெறியரோ, அல்லது பிற மதத்தை எள்ளி நகையாடக்கூடிய நபரோ அல்ல என்று சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவேற்றத்தின் வாயிலாக தன்னிலை விளக்கம் தந்துள்ளார்.
தொலைக்காட்சியில் தோன்றும் ஒரு சமையல் கலை நிபுணர் என்ற முறையில் தாம் எப்போதுமே உலகெங்கிலும் உள்ள அனைத்து மதங்களையும் கலாச்சாரங்களையும் மதித்து வந்துள்ளதாக செஃப் வான் தெரிவித்துள்ளார்.
செஃப் வான் என்று சுருங்க அழைக்கப்படும் ரெட்சுவான் இஸ்மாயில், ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த ஆடையைப் பார்த்துவிட்டு, தைப்பூச உற்சவத்தின்போது எடுக்கப்படும் காவடியுடன் ஒப்பிட்டு, கருத்தை பதிவேற்றம் செய்ததைத் தொடர்ந்து அவருக்கு எதிராக போலீசில் புகார்கள் செய்யப்பட்டு வருகின்றன.
மயில் பாவனை ஆடையுடன் தோன்றிய ஐஸ்வர்யா ராய், காவடியை அணிந்துகொண்டு பத்துமலையில் நடைபெறும் தைப்பூச விழாவுக்குச் செல்கிறார்,” என்று செஃப் வான் சமூக ஊடகத்தில் குதர்க்கமாக பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








