சிலாங்கூர், ஜூன் 14-
கடந்த வாரம், ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவியை கொலை செய்ததாக லாரி ஓட்டுநர் ஒருவர் கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.
31 வயது எஸ் சூர்யா ராஜ் என்ற அந்த லாரி ஓட்டுநர் மாஜிஸ்திரேட் சித்தி ஸுபைதா மாமத் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அவர் தலையசைத்தார்.
இவ்வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படவிருப்பதால் குற்றச்சாட்டப்பட்டிருந்த அந்த லாரி ஓட்டுநரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறை அல்லது கூடிய பட்சம் 12 பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 ஆவது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
கடந்த ஜூன் 7 ஆம் தேதி காலை 6.30 முதல் 7 மணி வரையில் சிலாங்கூர், பண்டார்ர் பொட்டானிக் -கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் படுக்கையறையில் 28 வயது ஏ கிர்ஷாஷினி என்ற தனது மனைவியை கொலை செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.








