மதம், இனம் மற்றும் அரச குடும்பம் எனும் 3R தொடர்பான உணர்ச்சிகரமான விவகாரங்களில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மாணவர் எஸ். விக்னேஸ்வரனை , பகாங் அல்-சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழகம் அதிரடியாக நீக்கம் செய்துள்ளது.
இது குறித்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் யாத்திமா அலியாஸ் கூறுகையில், கடந்த மார்ச் 9-ஆம் தேதி நடைபெற்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணையில், சம்பந்தப்பட்ட மாணவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டார். இதன் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர் ஒழுங்குமுறை விதிகளின் கீழ் அவர் உடனடியாகப் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் 21 வயதுடைய எஸ். விக்னேஸ்வரன் என்ற மாணவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் புனித குர்ஆனை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த மார்ச் 3-ஆம் தேதி குவாந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
"பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கு இந்த முடிவு அனைத்து மாணவர்களுக்கும் பணியாளர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும். பொது அமைதிக்கும், இன நல்லிணக்கத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான எவ்வித வெறுப்புப் பேச்சுகளையும் பல்கலைக்கழகம் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது" எனத் துணைவேந்தர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.








