அரச பிரமுகரின் மெய்காவலர்களில் ஒருவர், நேற்று கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மாற்றுத் திறனாளி ஒருவரைத் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வந்த வேளையில், இந்தப் பிரச்னையை நீட்டிக்க விரும்பவில்லை என்று அந்த மாற்று திறனாளி இரண்டாவது போலீஸ் புகார் செய்துள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ருஸ்டி முகமது இசா தெரிவித்தார்.
மின்-ஹைலிங் ஓட்டுநரான 46 வயதுடைய அந்த மாற்றுத் திறனாளி நேற்று இரவு 9.59 மணியளவில் செய்து கொண்ட மற்றொரு போலீஸ் புகாரில் இதனை தெரிவித்து இருப்பதாக ருஸ்டி முகமது இசா குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தை நல்ல முறையில் தீர்த்துக்கொள்ள விரும்புவதாக புகார்தாரரான அந்த மின்-ஹைலிங் ஓட்டுநர் இரண்டாவது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளதாக ருஸ்டி முகமது இசா தெரிவித்தார்.
எனினும் அந்த அரச பிரமுகர் யார் என்ற அடையாளத்தை ருஸ்டி முகமது இசா வெளியிடவில்லை என்ற போதிலும் அந்த அரச பிரமுகர் ஜோகூர் ரீஜண்ட் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம்- என்றும் அவரின் உடன் செல்லும் மெய்க்காவலர்களில் ஒருவர்தான் அந்த மாற்றுத் திறனாளியை தாக்கியதாக நம்பப்படுகிறது.
இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசிய புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முஹம்மது ஷுஹைலி முகமது ஜைன், இவ்விவகாரம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும், விசாரணை அறிக்கை திறக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.








