நாளை சன்வே வெலாசிட்டியில் உள்ள டிக்டாக் தலைமையகத்திற்கு வெளியே நடைபெறவிருக்கும் "ஹிம்புனான் கெகார் டிக்டாக்" பேரணி குறித்து போலீஸ்க்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் மற்றும் பரிந்துரைகள் மூலம் இந்தத் தகவல் கிடைத்துள்ளதாகவும், பொதுப் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில் இப்பேரணி சுமூகமாக நடைபெற போலீஸ் உரிய உதவிகளை வழங்கும் என்றும் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மர்சுஸ் தெரிவித்துள்ளார்.
செராஸ், ஆலாம் டமாய் தேசிய இடைநிலை பள்ளியில் நடைபெற்ற போக்குவரத்து விழிப்புணர்வு ஆதரவுத் திட்டத் தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்துத் தரப்பினரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், வன்முறைகள் அல்லது சட்ட மீறல்கள் ஏதேனும் ஏற்பட்டால் போலீஸ், மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
மலேசியக் கூட்டரசு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையைப் பாதுகாக்கவும், சமூக ஊடகத் தளங்கள் குறிப்பாக டிக்டாக் தங்களின் பதிவுகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது என வலியுறுத்தவும் இந்த அமைதிப் பேரணி ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக பாடில் தெரிவித்தார்.
மேலும் வர்த்தகர் ஆல்பர்ட் டெய் என்பவரால் அறிவிக்கப்பட்டுள்ள இப்பேரணி, நாளை காலை 10 மணிக்குத் டிக்டாக் தலைமையகத்தின் முன்னால் நடைபெறும் என்றும், இதில் பொதுமக்கள் மற்றும் டிக்டாக் பயனர்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஆல்பர்ட் டெய் தனது முகநூல் பதிவின் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.








