200 ஆண்டுகளுக்கு முன்னர் சயாமிய படையெடுப்பின்போது கெடா சுல்தானகமிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக நம்பப்படும் 30 பழமையான பீரங்கிகள் தென் தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கெடா, பெர்லிஸ், பினாங்கு வரலாற்றுப் பாதுகாப்பு சங்கத்தின் துணைத் தலைவர் முகமது ஹெர்மன் ரோஸ்லான் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த பீரங்கிகளில் பெரும்பாலானவை 12 பவுண்டர் ரகத்தைச் சேர்ந்தவை என்றும், அவை தற்போது தென் தாய்லாந்தில் உள்ள கோயில்கள் மற்றும் அரசாங்க அலுவலகங்களில் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
1821 முதல் 1842ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 'பெராங் முஸு பிசிக்' எனப்படும் சயாமியப் போரின்போது, கோத்தா கோலா கெடா-வில் இருந்த பீரங்கிகளை லிகோர் என அழைக்கப்பட்ட தற்போதைய நகோன் சி தம்மராட் பகுதியைச் சேர்ந்த சயாமியப் படைகள் கைப்பற்றிச் சென்றதாக நம்பப்படுகிறது.
சயாமியப் படையெடுப்பின்போது கோட்டையைப் பாதுகாக்க 123 பீரங்கிகள் இருந்ததாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. ஆனால் தற்போது அங்கு இரு பீரங்கிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
மேலும் 50 முதல் 60 வரையிலான கெடா சுல்தானகம் பீரங்கிகள் தென் தாய்லாந்தில் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இந்த பீரங்கிகள் கெடா சுல்தானகம், அக்காலத்திலேயே வலுவான இராணுவ சக்தியையும் போர் உத்திகளையும் கொண்டிருந்ததற்கான முக்கிய வரலாற்றுச் சான்றுகள் என ஹெர்மான் தெரிவித்தார்.








