ஷா ஆலாம், பிப்ரவரி.16-
இன்று திங்கட்கிழமை மதியம் கார் ஒன்றின் மீது மரம் விழுந்ததில் இரண்டு பெண்கள் காயமடைந்தனர்.
ஷா ஆலாம், பெர்சியாரான் துன் அர்ஷாட் ஆயுப், பங்சாபுரி பைடுரி அடுக்குமாடி வீடமைப்புப் பகுதி அருகே மதியம் 12.11 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. Mitsubishi Xpander ரக காரின் மீது மரம் விழுந்து நசுக்கியதில், அதற்குள் இருந்த 39 மற்றும் 42 வயதுடைய இரண்டு பெண்கள் சிக்கிக் கொண்டனர்.
இது குறித்து சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை விடுத்துள்ள அறிக்கையில், காரினுள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புத் துறையினரால் பகிரப்பட்ட புகைப்படங்களின்படி, காரின் முன்பக்க இருக்கைகளுக்கு நேர் மேலே அதன் கூரைப்பகுதி பலத்த சேதமடைந்து உள்வாங்கியிருந்தது தெரிய வந்தது.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தலை மற்றும் இடுப்புப் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். 12 வீரர்கள் அடங்கிய குழுவினர் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி அவர்களை மீட்டனர்.








