போர்ட்டிக்சன், செப்டம்பர்.05-
போர்ட்டிக்சன், பாசீர் பஞ்சாங், தஞ்சோங் அகாஸ் மேம்பாலத்தில் நேற்று கார் ஒன்று, பாலத்தை விட்டு விலகி, ஆற்றில் பாய்ந்து, இரு சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கணவனும், மனைவியும் 7 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்..
இந்த விபத்தில் உயிர் தப்பியதாகக் கூறப்படும் 46 வயது கணவனும், 41 வயது மனைவியும் இன்று காலையில் போர்ட்டிக்சன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அவர்களை வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு நீதின்றம் அனுமதி அளித்துள்ளதாக போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் மஸ்லான் உடின் தெரிவித்தார்.
கணவனும் மனைவியும், மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
41 வயதுடைய அந்தப் பெண், உயிரிழந்த பிள்ளைகளின் சொந்தத் தாயார் அல்ல. அவர், அந்த இரு பிள்ளைகளின் தந்தையின் காதலி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாஸ்லான் உடின் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.
தற்போது, அந்த இரு பிள்ளைகளின் உண்மையான தாயாரைப் போலீசார் தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று காலை 11.44 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 9 வயது சிறுவன் உயிரிழந்த வேளையில் நீரின் மத்தியில் காருக்குள் இருந்து மீட்கப்பட்ட சிறுவனின் 8 வயது தங்கை மூச்சுத் திணறலுக்கு ஆளாகி பின்னர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் அந்த சிறார்களின் தந்தையிடமும், தாயார் என்று கூறப்பட்ட பெண்ணிடமும் போலீசார் தனித்தனியே விசாரணை நடத்திய போது, இருவரும் அந்த விபத்து குறித்து வழங்கிய வாக்குமூலம் முற்றிலும் முரண்பாடாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.








