ரவாங் அருகில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் இருவர் கருகி மாண்டனர். இதில் ஒரு கொண்டெய்னர் லோரியும், காரும் எதிரும் புதிருமாக மோதி, தீப்பிடித்துக்கொண்டதில் காரில் பயணித்த 26 வயத ஆடவரும், 23 வயது பெண்ணும் கருகி மாண்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்ஹ்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
ரவாங், ஜாலான் குவாலா காரிங் கில் அதிகாலை 3.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் காரின் இடிப்பாடுகளில் சிக்கிக்கொண்ட இருவரின் கருகிய உடல்களை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தினர்.
இதில் ஹொன்டா சிட்டி ரக கார் 70 விழுக்காடு எரிந்த நிலையில் லோரி 50 விழுக்காடு சேதமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.
லோரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர். இருவரின் கருகிய உடல்களும் செலாயாங் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.








