பினாங்கு, ஜாலான் சுங்காய் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், போலீஸ்துறையினருடன் மோதலில் ஈடுபட்ட 8 உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டு, மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
28 முதல் 38 வயதுக்குட்பட்ட இந்த நபர்கள் மீது கலவரம் செய்தல் மற்றும் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று இரவு சுமார் 9.50 மணியளவில், சந்தேகத்திற்கிடமான ஒருவரைத் துரத்திச் சென்ற நான்கு போலீஸ் அதிகாரிகளுடன் அங்கிருந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மூன்று போலீஸாருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரோசாக் முகமட், "இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம்" எனப் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். மேலும், இது போன்ற செயல்கள் தேவையற்ற குழப்பத்தை விளைவித்து போலீஸ்துறையினரின் விசாரணையைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.








