இந்தோனேசியாவிற்கு போதைப்பொருள் கடத்தியதாகக் கைது செய்யப்பட்ட மலேசிய விமானியின் பயணப் பெட்டி, சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் ஸ்கேனர் இயந்திரங்கள் சந்தேகத்திற்குரியதாகக் கண்டறியவில்லை என்று மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு முகமை தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 28 அன்று இந்தோனேசியா செல்வதற்கு முன், அந்த 39 வயது விமானி அனைத்து பாதுகாப்பு சோதனைகளையும் முறைப்படி கடந்தார் என்று அதன் தலைமை இயக்குநர் ஷுஹைலி முஹமட் ஸையின் கூறினார். வழக்கமான ஸ்கேனர் சோதனையில் எந்தவொரு சந்தேகத்திற்குரிய பிம்பமும் தெரியாததால், அடுத்தகட்ட தீவிர சோதனைக்கு அவரது பைகள் உட்படுத்தப்படவில்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை, மலேசியா ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் 25 கிலோ போதைப்பொருளைக் கடத்தியதாக ஜகார்த்தா விமான நிலையத்தில் இந்தோனேசிய போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சுமார் 45 மில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்புள்ள 70 ஆயிரத்து 114 எக்ஸ்டசி மாத்திரைகளும், methamphetamine போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்காக அவருக்கு 50 ஆயிரிம் ரிங்கிட் கூலி பேசப்பட்டதாகவும், இதற்கு முன்பும் அவர் ஜகார்த்தா மற்றும் சபாவிற்கு போதைப்பொருள் கடத்தியதை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இந்தோனேசிய போலீசார் தெரிவித்துள்ளனர்.








