ஜோகூர் பாரு புக்கிட் இண்டா பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில், சுயமாகப் பிரசவித்த 19 வயதுடைய ரோஹிங்கியா இளம்பெண் ஒருவர், தனக்குப் பிறந்த குழந்தையின் உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றி, இரண்டாவது மாடி ஜன்னலில் இருந்து வீசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இஸ்கந்தர் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் எம். குமாரசன் வெளியிட்டுள்ள தகவலில், இச்சம்பவம் தொடர்பாக, அப்பெண்ணும், 34 வயதுடைய ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இருவரின் சிறுநீர் பரிசோதனையிலும் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான தடயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இதனிடையே, விசாரணை அறிக்கையானது ஜோகூர் அரசு தரப்பு துணை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, இளம்பெண் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








