நெகிரி செம்பிலான், ஜெம்போல்-லில் உள்ள ஒரு பள்ளியின் மண்டபத்தில் நேற்று மதிய உணவை உட்கொண்ட படிவம் ஒன்று முதல் படிவம் ஐந்து வரையிலான மொத்தம் 24 மாணவர்கள் துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒன்பது மாணவர்கள் இன்று வீட்டிற்கு திரும்ப அனுமதிக்கப்பட்டிருந்த வேளை, மேலும் 15 மாணவர்கள் உட்கொண்ட உணவில் நச்சுத்தன்மை கலந்திருக்கும் அறிகுறிகளின் அடிப்படையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக நெகிரி செம்பிலான் மாநில கல்வித்துறை இயக்குநர் ரோஸ்லான் ஹுசின் தெரிவித்தார்.
அம்மதிய உணவிற்கு பிறகு, இரவு 8 மணியளவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளதாக பணியிலிருந்த பாதுகாவலரிடம் அம்மாணவர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக ரோஸ்லான் ஹுசின் கூறினார்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட சுகாதாரத்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதுடன் இது தொடர்பாக எந்தவொரு ஆருடங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என்று ரோஸ்லான் ஹுசின் அறிவித்தார்.








