பத்து பூத்தே, ஜூன் 12-
ஜொகூர்-ருக்கு அருகேயுள்ள பத்து பூத்தே தீவு தொடர்பான அரச விசாரணை ஆணையம் - RCI குழுவிலிருந்து துன் முகமது ராஸ் ஷெரீப் உள்பட மூவரை வெளியேற்றுவதற்கு, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது செய்திருந்த மனுவை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
அதேவேளையில், அவ்வாணையத்தின் விசாரணை பொதுமக்களின் பார்வையில் நடத்தப்பட வேண்டுமென அவர் முன்வைத்திருந்த கோரிக்கையையும் நீதிபதி டத்தோ அமர்ஜித் சிங் நிராகரித்தார்.
ஆயினும், தற்போது நடைபெற்றுவரும் பத்து பூத்தே தொடர்பான RCI விசாரணையில், அவரை வழக்கறிஞர் பிரதிநிதிப்பது தொடர்பில், துன் டாக்டர் மகாதீர் சீராய்வு மனுவை பதிவு செய்வதற்கான அனுமதியை மட்டும் அமர்ஜித் சிங் வழங்கினார்.
மேலும், நீதிமன்ற சீராய்வு மனு குறித்த வழக்கு முடியும் வரையில் RCI விசாரணையை ஒத்திவைக்கும்படி துன் டாக்டர் மகாதீர் முன்வைத்திருந்த விண்ணப்பத்தையும் அவர் நிராகரித்து தீர்ப்பளித்தார்.
துன் டாக்டர் மகாதீர் பிரதமராக இருந்த போது, பத்து பூத்தே தீவு எவ்வாறு கையாளப்பட்டது என்பது குறித்து RCI விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.








