பத்தாங் பெர்ஜுந்தை, மே 04-
சிலாங்கூர் மாநிலத்தில் முன்பு பத்தாங் பெர்ஜுந்தை என்று விளங்கிய பெஸ்தாரி ஜெயா- வட்டாரத்தில் 5 தோட்டங்களைச் சேர்ந்த முன்னாள் பாட்டாளிகளான 245 குடும்பங்களின் வீட்டுடமைப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் உறுதி அளித்துள்ளார்.
கடந்த 26 ஆண்டு காலமாக தங்களின் வீட்டுடமைப் பிரச்னைக்கு தீர்வு காணும்படி போராடி வரும் 245 முன்னாள் தோட்டப் பட்டாளி குடும்பங்களுக்கு அடுத்த வாரம் நல்ல செய்தி காத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேரி தோட்டம் ( Mary), நைகல் கார்டனர் தோட்டம் ( Nigel Gardener ), சுங்கைத் திங்கி தோட்டம் ( Sungai Tinggi ), மின்யாக் தோட்டம் ( Minyak ) மற்றும் புக்கிட் தாகார் தோட்டம் ( Bukit Tahar ) ஆகிய ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த முன்னாள் பட்டாளி குடும்பங்கள் எதிர்நோக்கி வரும் வீட்டுப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மலேசிய மாடானி அரசாங்கம் பெருமனதுடன் இணக்கம் தெரிவித்து இருப்பதாக ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் தலைமை செயலாளர் ஆகியோருடன் தாம் கலந்தாலோசனை நடத்தியிருப்பதாக ங்கா கோர் மிங் விளக்கினார்.
தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினரான ங்கா கோர் மிங், தமது தொகுதியில் நேற்று நடத்திய ஹரிராயா பொது உபசரிப்பு நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.
கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு தாங்கள் வாக்களிக்க வேண்டுமானால் 20 ஆண்டுகுளுக்கு மேலாக தாங்கள் எதிர்நோக்கி வரும் வீட்டுடமைப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று அந்த முன்னாள் பட்டாளி குடும்பங்கள் இவ்வாரம் முற்பகுதியில் சிலாங்கூர் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.








