கோலாலம்பூர், ஜூன் 06-
இஸ்லாத்தை தழுவுவதற்கு ஆர்வம் கொண்டுள்ள முஸ்லிம் அல்லாத மாணவர்களை, ரகசியமான முறையில் எவ்வாறு மதம் மாற்றுவது என்பது குறித்து விளக்கம் அளித்த சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஃபிர்தௌஸ் வோங்- குறித்து சமய அதிகாரிகளும், கல்வி அமைச்சும் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என்று அரசாங்க சார்பற்ற அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
முஸ்லிம் அல்லாத 18 வயதுக்கு கீழ்பட்ட வயதுடைய மாணவர்களை மதம் மாற்றினால், சட்டப் போராட்டத்தில் தோல்வி அடைந்து விடுவோம். அந்த மாணவர்கள் சட்ட ரீதியாக இஸ்லாத்தை தழுவதற்கு முன்னதாக, ரகசியமான முறையில் அவர்களை சமய நடவடிக்கைகளில் எவ்வாறு ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கும் சமயப் போதகர் ஃபிர்தௌஸ் வோங்- சம்பந்தப்பட்ட டிக் டாக் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது. .
முஸ்லிம் அல்லாத பள்ளி மாணவர்கள் குறிப்பாக மூன்றாம் படிவம், நான்காம் படிவம் மற்றும் ஐந்தாம் படிவ மாணவர்கள் இஸ்லாத்தை தழுவுவதற்கு மிகுந்த ஆர்வமாக உள்ளனர் என்றும், அப்படிபட்ட மாணவர்களின் விருப்பத்தையும், கோரிக்கைகளையும் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்குமாறு ஒருவர் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் டிக் டாக்-கில் ஃபிர்தௌஸ் வோங் பேசியிருப்பதாக உலகளாவிய மனித உரிமை சம்மேளனத்தின் தலைவர் எஸ். சசி குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அந்த காணொளியில் ஃபிர்தௌஸ் வோங்- விவரித்துள்ள வழிமுறைகள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. குறிப்பாக 18 வயதுக்கு கீழ்ப்பட்ட வயதுடைய தங்கள் பிள்ளைகளின் மதத்தை முடிவு செய்யக்கூடிய அதிகாரத்தையும் உரிமையை பெற்றோர்கள் இழக்கக்கூடும் என்று சசிகுமார் அச்சம் தெரிவித்துள்ளார்.
இஸ்லாத்தில் தழுவ ஆர்வம் கொண்ட 18 வயதுக்கு கீழ்பட்ட முஸ்லிம் அல்லாத மாணவகள், குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாமலேயே மிக ரகசியமான முறையில் எவ்வாறு சமய நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்பது குறித்து ஃபிர்தௌஸ் வோங்- கூறியிருக்கும் ஆலோசனைள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று சசிகுமார் கேட்டுக்கொண்டர்.
சம்பந்தப்பட்ட சமயப் போதகருக்கு எதிராக இதற்கு முன்பு ஏகப்பட்டபோலீஸ் புகார்கள் செய்யப்பட்டு விட்டன. ஆனால், போலீசார் இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சசிகுமார் குற்றஞ்சாட்டினார்.
சட்டவிரோத மதமாற்றம் விவகாரங்கள் மலேசியாவில் கடுமையாகி வரும் வேளையில் இதனை உடனடியாக கையாளுவதற்கு ஃபிர்தௌஸ் வோங்- கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து உடனடியாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற சசிகுமார் கேட்டுக்கொண்டார்.








