அலோர் காஜா, ஜூன் 12-
தனது உடன் பிறந்த சகோதரனை வேண்டுமென்றே அரிவாளால் வெட்டி காயம் விளைவித்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவர் அலோர் காஜா செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.
27 வயது முஹம்மது துவா எம்டி டாலி என்ற அந்த ஆடவர் நீதிபதி நாரிமன் பதுருதீன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 326 மற்றும் 326A ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 5 ஆம் தேதி இரவு 8.40 மணியளவில் மலாக்கா, கோலா சுங்கை பாரு, குவாலா லிங்கி மீன்பிடி கிராமம் -யில் உள்ள ஒரு வீட்டில் 33 வயது முஹம்மது ரெட்சா என்ற தனது உடன் பிறந்த அண்ணனை வேண்டுமென்றே அரிவாளால் வெட்டி காயம் ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.








