கேங் 24 குண்டர் கும்பலில் உறுப்பியம் பெற்றது மற்றும் ஆயுதம் தாங்கிய கலவரத்தில் ஈடுபட்டதாக வயது குறைந்த 3 இளைஞர்கள் உட்பட 14 பேர் பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
15 க்கும் 51 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 14 பேரும், நீதிபதி நூர் ஐனி யூசோப் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
பாராங் மற்றும் மரக்கட்டைகளை ஆயுதமாக பயன்படுத்திய இவர்கள், 21 வயது இளைஞரை தாக்கி கடும் காயம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
இந்த 14 பேரும் கடந்த மே 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 7.15 மணியளவில் பினாங்கு செபெராங் பெராய் உத்தாரா மாவட்டத்தில் தாமான் பூங்கா ராயா, லோரோங் பூங்கா ராயா 2 என்ற இடத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இந்த 14 பேரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.








