குவந்தான், ஜூன் 04-
குவந்தான், செமாம்பு-வில் உள்ள ஓர் எண்ணெய் நிலையத்தில் காரை நிறுத்திய பெண் கணக்காய்வாளர் ஒருவர் , வயதான தனது தாய், தந்தையை காரில் அமர்ந்திருக்கும்படி கூறி,விட்டு எண்ணெய் நிலையத்தின் கழிப்பறைக்கு சென்ற வேளையில் அந்த வயதான தம்பதியருடன் அவர்களின் ஹோண்டா சிட்டி காரை களவாடிச் சென்ற நபர், பெந்தோங்- கில் பிடிபட்டார்.
கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 3.10 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அந்த சிறப்பு நிற ஹோண்டா சிட்டி காரில் இருந்த பெண் கணக்காய்வாளரின் 77 வயது தந்தை மற்றும் 68 வயது தாயாரை, அந்த ஆசாமி, சுமார் 400 மீட்டர் தூரத்தில் சாலையோரத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளார்.
எவ்வித காயமின்றி அந்த தம்பதியர் உயிர் தப்பிய போதிலும், 38 வயது மாதுவின் காரை களவாடி சென்ற நபரை பிடிப்பதற்கு தீவிர தேடுதல் வேட்டையை போலீசார் நடத்தியதில் அந்த நபர் பெந்தோங்கில் பிடிபட்டதாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்தவிருப்பதாக அவர் மேலும் கூறினார்.
கோலாலம்பூர், செந்தூல் வட்டாரத்தை சேர்ந்த அந்த மூத்த தம்பதியர், பணி ஓய்வுப்பெற்ற முன்னாள் ஆசிரியர்கள் என்பது தெரியவந்துள்ளது.








