கிள்ளான் , ஜூன் 04-
இன்று பிற்பகலில் பெய்த கனத்த மழையில் மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு சாலையில் விழுந்ததில் இரு கார்கள் சேதமுற்றன. இதில் கணவன், மனைவி, இரு பிள்ளைகள் உட்பட ஐவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 3.10 மணியளவில் கிள்ளான், ஜாலான் காப்பார் 6 ஆவது மையில் நிகழ்ந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வட கிள்ளான் மாவட்ட தீயணைப்பு நிலையத்தார், மரக்கிளைகள் மத்தியில் சிக்கி, தங்கள் கார்களிலிருந்து வெளியேற முடியாமல் இருந்த இரு கார்களில் உள்ள ஐவரை, பாதுகாப்பாக மீட்டனர் என்று அஹ்மத் முக்லிஸ் குறிப்பிட்டார்.








