ஜோர்ஜ்டவுன்,பிப்.6
பினாங்கு பாலத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஓர் தம்பதியர் மற்றொரு மோட்டார் சைக்கிளோட்டியை எட்டி உதைத்து, அடாவடித்தனம் புரிந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தம்பதியை போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்தனர்.
அந்த தம்பதியரின் இந்த அராஜக செயல் தொடர்பாக காணொளி ஒன்று சமூகத் தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து அந்த தம்பதியரை தேடும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டதாக செபெராங் பெராய் தெங்ஙா மாவட்ட போலீஸ் தலைவர் ஹெல்மி அரிஸ் தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளிகளான அந்த தம்பதியர், தங்கள் அருகில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டியை இருவரும் காலால் எட்டி உதைத்ததுடன், கையில் மணல் போன்ற ஏதோ ஒரு பொருளை அந்த மோட்டார் சைக்கிளோட்டி மீது வீசுவதை அந்த ஒரு நிமிட காணொளி சித்தரிக்கிறது.
50 வயது ஆடவரும், 30 வயது பெண்ணும் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இத்தம்பதியர் 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் போலீஸ் குற்றப்பதிவுகளை கொண்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஹெல்மி அரிஸ் குறிப்பிட்டார்.








