சிறையிலுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியத்திடம் பொது மன்னிப்புக் கோரி புதிய விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விண்ணப்பம் ரமலான் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அதன் பிரதி இஸ்தானா நெகாராவுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
SRC இன்டர்நேஷனல் அல்லது 1MDB வழக்குகள் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் தமக்கு முழுமையான விடுதலை அளிக்கப்பட வேண்டும் என அந்த விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
எனினும், நஜிப்பின் வழக்கறிஞர் ஃபர்ஹான் ஷபி, இது குறித்து தமக்குத் தெரியாது எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே SRC வழக்கில் 12 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நஜிப்பிற்கு, மன்னிப்பு வாரியம் அதனை 6 ஆண்டுகளாகக் குறைத்திருந்தது. தற்போது 1MDB வழக்கிலும் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய மன்னிப்பு விண்ணப்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








