கோலாலம்பூர், மார்ச்.25-
நாட்டின் முக்கியச் சுற்றுலாத் தலமான கெந்திங் மலைக்குச் செல்லும் தனியார் சாலையில் கட்டணம் வசூலிப்பதற்கான முதற்கட்ட சோதனை ஓட்டம் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்கும் என Lingkaran Cekap Sdn Bhd நிறுவனம் அறிவித்துள்ளது.
கெந்திங் செம்பா (Genting Sempah) மற்றும் கோத்தோங் ஜெயா (Gohtong Jaya) வட்டச் சாலை ஆகிய இரண்டு நுழைவுப் புள்ளிகளில் இந்தச் சோதனை நடைபெறும்.
இந்த வெள்ளோட்டக் காலத்தின் போது பயணிகளிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. இருப்பினும், அமைப்பின் செயல்பாட்டை உறுதிச் செய்ய, வாகன ஓட்டிகள் தங்கள் Touch ‘n Go, டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை நுழைவாயிலில் உரசிச் செல்ல வேண்டும்.
இந்தச் சோதனை ஓட்டம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அந்த சுற்றுலாத் தலத்தை நிர்வகித்து வரும் கெந்திங் மலேசியா நிறுவனம் தனது தனியார் சாலையைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் விதிக்கப் போவதாக கடந்த ஆண்டு நவம்பரில் உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.








