நாட்டில் நீடித்து வரும் கடும் வெப்பநிலையை முன்னிட்டு, மாணவர்களின் நலனை உறுதி செய்ய கல்வி அமைச்சு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து இஸ்தானா நெகாரா வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து நிலவி வரும் வெப்ப அலை ஜூன் மாத நடுப்பகுதி வரை நீடிக்கக்கூடும் என்பதால், மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என்று மாமன்னர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், அதிக வெப்பநிலையை கருத்தில் கொண்டு வெளிப்புற செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளவும், போதுமான அளவு தண்ணீர் குடித்து உடல் நீர்ச்சத்தை பராமரிக்கவும் பொதுமக்களை மாமன்னர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக தீ விபத்துகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையும் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதிக வெப்பநிலை மற்றும் பலத்த காற்று காரணமாக தீ வேகமாக பரவக்கூடும் என்பதால், பொதுமக்கள் திறந்த வெளியில் தீ மூட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும் நேற்று அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.








