எக்ஸ்பிரஸ் ரயில் லிங்க் எனப்படும் ஈஆர்எல் ரயில் சேவைகளில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் மற்றும் கேஎல்ஐஏ டிரான்சிட் ஆகிய இரு ரயில் சேவைகளும் இன்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மறுஅறிவிப்பு வரும் வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அதன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் கோளாறுக்கான காரணம் அல்லது சேவைகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்பது குறித்த கூடுதல் விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
சிப்பாங் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு பயணம் செய்யும் பயணிகள், தற்போதைய சேவை நிலவரங்களை அறிந்து கொள்ள ரயில் நிலைய பயணச்சீட்டு முகப்பிடங்களை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு ரயில் சேவை நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.








