சிப்பாங், ஜூலை.28-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில், விமானத் தாமதம் காரணமாக விமான நிறுவன ஊழியர்களைத் திட்டி, மிரட்டல் விடுத்த 25 வயது இந்தோனேசிய ஆடவர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் நிகழ்ந்ததாக KLIA விமான நிலைய போலீஸ் தலைவர், உதவி ஆணையர் எம். ரவி தெரிவித்தார்.
நேற்று பிற்பகல் 3 மணிக்கு இந்தோனேசியா திரும்ப வேண்டிய அந்த ஆடவர், விமானம் 5 மணி நேரம் தாமதமானதால் அவர் கடும் ஆத்திரமடைந்துள்ளார். இதனால் அங்கிருந்த ஊழியர்களிடம் வம்பு இழுத்து, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அந்த அந்நிய ஆடவர் நடந்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் குடிநுழைவு அதிகாரிகளிடமும் அந்த நபர் அநாகரீகமாக நடந்து கொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த நபருக்கு 4 நாட்கள் தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டதாக உதவி ஆணையர் எம்.ரவி தெரிவித்தார்.








