சிரம்பான், ஜூலை.28-
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வாக்களிப்பதற்காகப் போலீசாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகாரை மாநில போலீஸ் தலைவர் Datuk Alzafny Ahmad திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அரசியல் ஆர்வலர் Chegubard வெளியிட்ட இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் ஓர் அவதூறு என்று குறிப்பிட்ட அவர், போலீஸ்துறை எப்போதும் தொழில்முறையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையுடனும் மட்டுமே செயல்படுவதாக உறுதியளித்தார்.
மேலும், வாக்களித்ததற்கான ஆதாரமாக வாக்குச்சீட்டின் வரிசை எண்களைச் சமர்ப்பிக்குமாறு போலீசாருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகாரையும் அவர் மறுத்தார்.
இது தொடர்பாக இதுவரை எந்தவோர் அதிகாரப்பூர்வப் புகாரும் வரவில்லை என்றும், ஒருவேளை போலீஸ்துறை அதிகாரிகளின் முறைகேடுகள் குறித்து முறையான புகார்கள் ஏதேனும் வந்தால், அது உடனடியாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு மாற்றப்படும் என்றும் Datuk Alzafny Ahmad மேலும் கூறினார்.








