சைபர்ஜெயா, ஜூலை.28-
செயற்கை நுண்ணறிவான AI தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு, 'டீப்ஃபேக்' (Deepfake) போலியான உள்ளடக்கங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகளைத் தடுப்பதற்காக அரசாங்கம் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தவுள்ளது.
இன்று சைபர் ஜெயாவில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமினால் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கப்பட்ட 'ஏஐ மலேசியா' திட்டத்தின் தொடக்க விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலக்கவியல் அமைச்சர் Gobind Singh Deo, மக்கள் மற்றும் தொழில்துறையினரிடையே AI பயன்பாட்டை விரிவுபடுத்தும் அதே வேளையில், பயனீட்டாளர்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதும் அவசியம் என்றார்.
இதன் ஒரு பகுதியாக, 'சைபர் பாதுகாப்புச் சட்டம்' மூலம் நாட்டின் இணையப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்றும், 'தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம்' மற்றும் அதன் ஆணையம் ஆகியவை மேலும் பலப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
தனிநபர் தரவுகள் தவறான நபர்களின் கைகளுக்குச் செல்வதைத் தடுத்து, ஆன்லைன் பண மோசடிகளைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும் என்பதையும் கோபிந்த் சிங் விளக்கினார்.








