கோலாலம்பூர், மே 28-
பத்து ஆண்டுகளுக்கு முன்பு 239 பேருடன் நடுவானில் மாயமான மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான MH 370 விமானத்தின் உடைந்த பாகங்கள் கம்போடியாவில் உள்ள ஓர் அடர்ந்த காட்டுப்பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை கம்போடியா அரசாங்கம் மறுத்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கை நோக்கி புறப்பட்ட MH 370 விமானம் காணாமல் போன சம்பவத்திற்கு விடைகாணும் வகையில் அந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் கம்போடியாவில் உள்ள காட்டில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்தைச் சேர்ந்த வான்போக்குவரத்து துறை நிபுணர் இயன் வில்சனை மேற்கோள்காட்டி பிரிட்டிஷ் பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்தி உண்மை அல்ல என்று கம்போடியா கூறுகிறது.
எனினும் அந்த தகவல் உண்மையாக இருக்குமானால் அந்த விமானத்தை தேடிக் கண்டு பிடிப்பதிலும், மீட்பதிலும் மலேசியாவிற்கு உதவ கம்போடியா அரசாங்கம் தயாராக இருப்பதாக அது அறிவித்துள்ளது.








