வியூக முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணை வழியாக மலேசியக் கப்பல்கள் தடையின்றிப் பயணிக்க ஈரான் அரசு அனுமதி அளித்துள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழலுக்கு மத்தியிலும், மலேசியக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டாங்கர்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்த ஈரான் பச்சைக்கொடி காட்டியுள்ளது என்று பிரதமர் விளக்கினார்.
தற்போது அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மலேசியக் கப்பல்களில் உள்ள ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் உறுதியளித்துள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
ஈரான், எகிப்து மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் அன்வார் மேற்கொண்ட தொடர் பேச்சுவார்த்தைகளின் விளைவாக இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது. மலேசியக் கப்பல்கள் விரைவில் அந்தப் பகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேறத் தொடங்கும் என்று பிரதமர் விளக்கினார்.








