தனது தாயை தாக்கியதாகவும், பணம் கொடுக்காததற்காக தனது உடன் பிறந்த சகோதரியை பாராங்கை காட்டி மிரட்டியதாகவும் தேங்காய் பறிக்கும் தொழிலாளி ஒருவருக்கு 9 மாதச் சிறைத்தண்டனை விதிக்க மூவார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
36 வயது நவீந்திரன் சுப்ரமணியன் என்ற அந்த தொழிலாளி மாஜிஸ்திரேட் ஃபாடின் தலிலா காலித் முன்னிலையில் இரு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டு அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் 323 பிரிவின் கீழ் கூடிய பட்சம் ஓர் ஆண்டு சிறை அல்லது 2,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படலாம் என்று முதற் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்ட வேளை, குற்றவியல் சட்டம் 352 பிரிவின் கீழ் கூடிய பட்சம் 3 மாதச் சிறை அல்லது 1,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும் என்று இரண்டாம் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 17 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் மூவார், சுங்கை அபோங் - கில் உள்ள தனது வீட்டில் 66 வயதுடைய தாயை கையால் அடித்து துன்புறுத்தியதாகவும் மூத்த சகோதரியை பணம் கொடுக்காத காரணத்திற்காக பாராங்கை காட்டி மிரட்டியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டப்பட்டிருந்தது.








